கவிதை- 2

                                   காணும் யாவரும் காண்பவரே

 உயர் தாழ் ஒன்றும் அறியேன் பணம் எனக்கோர் காகிதமே ஆடியும் அம்பாசிடரும் ஊர் சுற்றும் வாகனமே .

கருப்பு வெள்ளை யாவும் நிறமின்றி வேறில்லை காகமும் குயிலும் சத்தம் எழுப்பும் பறவைகளே கடவுள் சிலையும் கருங்கல்லும் ஒன்றே .

சாத்திரம் மூத்திரம் பாத்திரம் சூத்திரம் ஏதும் தெரியாது .
அறிவாளி முட்டாள்  யோக்கியன் அயோக்கியன் பெரியவன் சிறியவன் ஏதும் புரியாது எனக்கு.

பொய் புனைவு புரட்டு நடிப்பு ஏமாற்றம்  பித்தலாட்டம் எனக்கு வராது.

சுதந்திரமான என்னை பார்த்து எல்லாரும் பரிகசிப்பது ஏன் ? வருத்தப்படுவது  ஏன் ?

கிடைப்பதை உண்டு வெளியில் உறங்கி அம்மணமாய் நடக்கிறேன் வீறு நடை போட்டு கள்ளங்கபடமின்றி காற்றோடு காற்றாய்  சிரிக்கிறேன்.

ஏதோ புரியாத மனபிறழ்வு என்று சொல்கிறார்கள் மனம் முழுதும் கனத்த கனவான்கள்.
கேட்பவை எனக்கு எதுவும் கேட்பவை அன்றி வேறு எதுவும் இல்லை.
தூற்றினால் துயரில்லை ஏசினால் வருத்தமும் இல்லை பாவபட்டால் பரிதாபமும் எனக்கு இல்லை .

உணர்வு உண்டு உணர்வு இல்லை.
பேசுவோர் பேசட்டும் கேட்போர் கேட்கட்டும் காண்போர் காணட்டும் 
காணும் யாரும் காண்பவரே வேறொன்றுமில்லை. 

Comments